ஜூரோங் ஈஸ்ட்டில் இருக்கும் கூட்டுரிமை அடுக்குமாடி வீடு ஒன்றில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி காரணமாக தீ மூண்டுவிட்டது. இதனால் அந்தக் கட்டடத்திலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட வயதுள்ள ஒரு மாதுக்கு முகத்தில் இலேசான தீப்புண் ஏற்பட்டது.
அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எண் 37 ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 முகவரியில் இருக்கும் பார்க் ஓயசிஸ் கட்டடத்தில் 12வது மாடி வீட்டில் தீ மூண்டதாக தனக்குத் தகவல் வந்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 10 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது என்று அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்காப்புப் படை அங்கு சென்று சேர்ந்ததற்கு முன்பாக மேல்மாடி வீடுகளிலிருந்து சுமார் 40 பேர் வெளியேற்றப்பட்டதாகத் தெரியவந்தது.