நீ ஆன், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தங்களது முழுநேர ஆரம்பக்கல்விப் பட்டய வகுப்புகளிலுள்ள 300க்கும் மேற்பட்ட இடங்களை புதன்கிழமை தொடங்கும் முன்பதிவு சேர்ப்பு நடவடிக்கையில் வழங்குகின்றன. இவ்வாண்டு தொடங்கப்பட்ட முன்பதிவு சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரணநிலைத் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே தங்களுக்குப் பிடித்த பட்டய வகுப்பில் இடம் பிடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட துறையில் திறமையும் ஆர்வமும் இருப்பதோடு விளையாட்டு, சமூகச் சேவை போன்ற துறைகளிலும் ஈடுபாடுள்ள மாணவர்கள் முன்பதிவு சேர்ப்பு நடவடிக்கையில் பங்குபெறலாம்.
பலதுறைத் தொழிற்கல்லூரி நேரடி சேர்ப்பு நடவடிக்கைக்குப் பதிலாக முன்பதிவு நடவடிக்கை நடப்புக்கு வருகிறது. பலதுறைத் தொழிற்கல்லூரி சிறப்புக் கூட்டுச் சேர்ப்பு நடவடிக்கையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இரு பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் முழுநேர ஆரம்பக் கல்விப் பட்டய வகுப்புகளை விரிவுபடுத்தி வருகின்றன. இவ் வாண்டு மூன்று பட்டயப் படிப்புகளில் சாதனை அளவாக 590 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது சென்ற ஆண்டைவிட 74 விழுக்காடு அதிகம். இவர்களில் 265 மாணவர்கள் நேரடி சேர்ப்பு நடவடிக்கை அல்லது சிறப்புக் கூட்டுச் சேர்ப்பு நடவடிக்கை மூலம் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆரம்பக்கல்விப் பட்டயம், குழந்தை மனநல ஆரம்பக்கல்விப் பட்டயம் ஆகியவற்றையும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆரம்பக்கல்விப் பட்டயத் தையும் வழங்குகின்றன.