உறவுப்பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த தன்னுடைய கணவரைக் காப்பாற்ற முயன்ற ஒரு மாதுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாது 2012 டிசம்பர் 20ஆம் தேதி நீதி நடை முறையை வேண்டுமென்றே தடுத்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த 47 வயது மாதுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர், தனது கணவர் 14 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததைப் பற்றி புகார் தெரிவிக்க தவறியதாகக் கூறும் இரண்டாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.
மாதின் 55 வயது கணவர் இப்பொழுது 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 2010, 2012ஆம் ஆண்டுகளில் அப்பொழுது 12, 13 வயதாக இருந்த அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும் மானபங்கம் செய்ததற்காகவும் அந்த ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.