யீசூனில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த விபத்தில் மற்றொரு காரும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்டிருந்தன. விபத்தில் 50க்கும் அதிக வயதுள்ள ஓர் ஆடவரும் 40க்கும் அதிக வயதுள்ள ஒரு மாதும் இலேசாகக் காயம் அடைந்தனர். யீசூன் அவென்யூ 2, யீசூன் சென்ட்ரல் சந்திப்பில் காலை 8.05 மணிக்கு விபத்து நிகழ்ந்ததாகத் தனக்கு தகவல் வந்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீயணைப்பு வண்டி, மருத்துவ வாகனம், தீயணைப்பு மோட்டார் சைக்கிள் வாகனம் எல்லாம் அங்கு அனுப்பப்பட்டன.
காயம் அடைந்த இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர். இதற்கிடையே, தெம்பனிஸ் விரைவுச்சாலையில் அதே நாளன்று மாலை உச்ச நேரத்தில் நிகழ்ந்த வேறொரு விபத்தில் ஒரு டிரக் வாகனம் கவிழ்ந்தது. அதன் காரணமாக விரைவுச் சாலையின் மூன்று தடங்கள் தடைப்பட்டன. அதனால் போக்கு வரத்துத் தேக்கம் ஏற்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.