தாய்லாந்தின் தலைநகரம் பேங்காக்கில் ஒரு கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து பொருட்களைத் திருடியதற்காக இரு சிங்கப்பூரர்கள் பிடிபட்டனர். ஆனால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் புகைப்படத்திற்காக சிரித்தபடியே அவர்கள் காட்சிகொடுத்தார்கள். அந்தப் படங்கள் சமூக இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டதை அடுத்து தாய்லாந்து, சிங்கப்பூர் இரண்டு நாடுகளையும் சேர்ந்த பலரும் பெண்களின் நடத்தையைக் கண்டித்தனர்.
தாய்லாந்தின் 'பிளாட்டினம் ஃபேஷன் மால்' கடைத் தொகுதியின் ஒரு கடையில் அந்த 18 வயது பெண்கள் ஜூன் 16ஆம் தேதி இரண்டு உள்ளாடைகளைத் திருடி மாட்டிக்கொண்டார்கள். இருவரும் ஆடைகள் திருடியதை கடையில் இருந்த பிரத்யேகப் புகைப்பட சாதனம் காட்டிக் கொடுத்தது. அவர்கள் அந்தக் கடையைவிட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால் மற்றொரு கடைத்தொகுதியில் பிடிபட் டனர். அந்தப் பெண்களை பிளாட்டினம் கடைத்தொகுதிக்குத் திரும்ப அழைத்து வந்த கடைக்காரர்கள் அந்தப் பெண்களுடன் இழப்பீடு பற்றிப் பேசினார்கள். கடைசியில் அந்தப் பெண்களிடமிருந்து 5,000 பாட் (S$190) பெற்றுக்கொள்ள கடைக்காரர்கள் இணங்கினார்கள்.