செந்தோசாவில் பலவான் கடற்கரை டிராம் வண்டி தாழ்ந்த மேடை ஒன்றில் மோதுவதைத் தவிர்த்துக்கொள்வதற்காக திடீரென்று நிறுத்தப்பட்டபோது அதிலிருந்த இரண்டு பேர் காயம் அடைந்துவிட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். இந்தச் சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணிக்கு நிகழ்ந்ததாக செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது.
சம்பவம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அது கூறியது. அச்சம்பவம் பற்றி தனக்குப் பிற்பகல் சுமார் 2.15 மணிக்குத் தகவல் வந்த தாகவும் புலன்விசாரணை தொடர்வதாகவும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். காயம் அடைந்தவர்களில் ஒருவர் 60க்கும் அதிக வயதுள்ள மாது. மற்றொருவர் ஆடவர். இந்த விவகாரம் குறித்து புலன்விசாரணை நடப்பதாகக் கழகம் குறிப்பிட்டது.