சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று பின்னிரவு காலாங்-= பாயா லேபார் விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதையில் பாவனை அவசரகாலப் பயிற்சியை நடத்தியது. சுரங்கப்பாதையில் பெரும் விபத்து ஏற்பட்டு, வாகனங்களில் தீ பிடிப்பது, பலருக்குக் காயங்கள் ஏற்படுவது போன்ற பாவனைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்புப் பயிற்சி, காயமடைந்தவர்களை விரைவில் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை மேற்கொண்டன. இந்தப் பயிற்சிக்காக காலாங் - பாயா லேபார் விரைவுச்சாலை சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிறு அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டிருந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செயல்முறை நடவடிக்கை களையும் அவசரகால தயார்நிலைத் திட்டங்களையும் உச்சநிலையில் புதுப்பித்துக் கொள்ளும் தொடர் முயற்சியின் ஓர் அங்கமாக இந்தப் பாவனைப் பயிற்சி நடத்தப்பட்டது.