தோழியை விடாமல் துரத்தி அவமானப்படுத்திய குற்றத்திற்காக உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் நேற்று ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஏட்ரியன் கோ குவான் கியோங் என்ற 38 வயது அதிகாரி கடந்த ஆண்டு இந்தக் குற்றத்தைப் புரிந்தார். இந்த மாதத்தில் இதுபோன்ற குற்றத்திற்காக தண்டனை பெறும் இரண்டாவது குற்றவாளி ஏட்ரியன் கோ. இதற்கு முன்பு லாய் ஷி ஹெங் என்ற 26 வயது ஆடவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஓராண்டுச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதுகுறித்து அரசாங்க வழக்கறிஞர் தியாகேஷ் சுகுமாறன் கூறும்போது, "தண்டனை பெற்ற கோ திருமணமானவர். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அவரால் தொந்தரவு செய்யப்பட்ட பெண்ணுக்கு வயது 25. அந்தப் பெண்ணுடன் 2011ஆம் ஆண்டில் பழக்கமானார்.
"அந்த சமயம் அந்தப் பெண் பல்கலைக்கழகப் படிப்பு முடித்து விடுமுறையில் இருந்தார். அவர்களின் முதல் சந்திப்பிற்குப் பிறகு அவர்களின் நட்பு தொடர்ந்தது. அந்தப் பெண்மணி அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியத் தொடங் கினார். அப்போதும் அவர்களது உறவு தொடர்ந்தது. அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது அந்தப் பெண்மணியை அவரது அனுமதியுடன் ஆடையின்றி கோ புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்தப் படங்களை எவ்வகையிலும் வெளியிட மாட்டேன் என்று அந்தப் பெண்ணுக்கு வாக்குறுதியளித்தார். இந்நிலையில் இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் நேரிட்டது.
"அந்தப் பெண்ணுக்காக அதிகமாகப் பணம் செலவழிப்பதாகவும் ஆனால் அந்தப் பெண்ணுக்கோ வேறு சில ஆடவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் உணர்ந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. "இந்நிலையில் அந்தப் பெண்ணுடைய கைத்தொலைபேசி வாயிலாக அவரது அந்தரங்கப் படங்களை 'வாட்ஸ்அப் குரூப்'பில் அனுப்பிவிட்டார் கோ.