பத்தாயிரம் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள், பலமாடி கார் நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றில் போலிஸ் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தும் 'போல்கேம் 1.0' திட்டத்தின் கீழ் மொத்தம் 62,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இந்த கேமராக்களிலிருந்து பெறப்படும் படங்கள் உதவிகரமாக இருக்கின்றன. இவ்வாண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட 2,300 அத்தகைய காணொளிகள் 1,100 வழக்குகளின் விசாரணையில் உதவி யுள்ளன. தேவைக்கேற்ப கட்டப்படும் பிடிஓ வீடுகளிலும் கார் நிறுத்துமிடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும் என போலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'போல்கேம் 2.0' எனும் திட்டத்தின் அடிப்படையில் நகர மையங்களில் உள்ள பொது இடங்கள், அக்கம்பக்க நிலையங்கள், உணவுக்கடைத்தொகுதிகள், போக்குவரத்து வசதிகளுக்கு இட்டுச்செல்லும் இணைப்புப் பாதைகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின்கீழ் ஏற் கெனவே அங் மோ கியோ டவுன் சென்டர், பிடோக் டவுன் சென்டர், ஜூரோங் கேட்வே ஆகிய பகுதிகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த சில இடங்களில் தீவு முழுவதும் 2,500 இடங்களில் மேலும் 11,000 கேமராக்கள் அமைக்கப்படவுள்ளன. இத்தகைய கேமராக்கள் அமைக்கப்படுவதால் அக்கம்பக்கம், பொது இடங்களில் பாதுகாப்பு மேம்படும் என போலிஸ் துணை ஆணையர் லாவ் பீட் மெங் கூறினார்.
பொது இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் போலிஸ் கேமராக்கள்