நீதிமன்ற அவமதிப்பு என்ன என்பதை விளக்கும் சட்டப் பிரிவுகள் எழுத்து வடிவில் நேற்று நாடாளுமன்றத்தில் சட்டத்துக்கான மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜாவால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, நீதித்துறை தொடர்பாகத் தெரிவிக்கக்கூடிய கருத்துகள் எழுத்து வடிவில் சட்டமாக்கப்படும். குற்றவியல் சட்டப்பிரிவுகள் நாடாளுமன்றத்தால் எழுத்து வடிவம் பெற்றுள்ளன. ஆனால் நீதிமன்ற அவமதிப்பு என்பது அதற்கு விதிவிலக்காக தொன்றுதொட்டு வந்த பாரம்பரியக் குற்ற மாகக் கருதப்படுகிறது. இந்தநிலை இப்போது மாறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீதித்துறை நிர்வாக (பாதுகாப்பு) சட்டம் அதற்கு வகை செய்கிறது. இந்தச் சட்டம் நீதிமன்ற அவமதிப்பு என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது. எனினும் பெரும்பாலும் இச்சட்டத்தில் பெரிய மாற்றமில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த சட்ட அமைச்சர் கா.சண்முகம், இச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய மூன்று நன்மைகளை விளக்கினார்.