சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கடந்த ஏப்ரல் மாதம் தடுத்து வைக்கப்பட்ட நான்கு பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டுக்காக 24 மாதம் முதல் 60 மாதம் வரையிலான சிறைத்தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட்டது. ரஹ்மான் மிஸானுர், 31, மியா ருபேல், 26, முஹம்மது ஜபாத் கைசர் ஹாஜே நூருல் இஸ்லாம் சௌடாகர், 31, சோஹெல் ஹௌ லாடர் இஸ்மாயில் ஹௌலாடர், 29 ஆகியோரே தண்டனை விதிக்கப்பட்ட நால்வர்.
இவர்கள் அனைவரும் கடந்த மே 31ஆம் தேதி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். பங்களாதேஷில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் நோக்கில் பணத்துக்கு ஏற்பாடு செய்ததாக அல்லது பணம் வசூலித்ததாக முன்னதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கும்பலுக்குத் தலைவனாகக் கருதப்படும் ரஹ்மான் மிஸானுருக்கு 60 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சோ ஹெலுக்கு 24 மாதச் சிறையும் எஞ்சிய இருவரில் ஒவ்வொருவருக் கும் 30 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனை தொடங்கும் காலம் மே 27 என பின்தேதியிடப்பட்டுள்ளது. அந்த நாளில்தான் அந்த நால்வரும் முதன்முதலாக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்கள் (இடமிருந்து) ரஹ்மான் மிஸானுர், 31, மியா ருபேல், 26, முஹம்மது ஜபாத் கைசர் ஹாஜே நூருல் இஸ்லாம் சௌடாகர், 31, சோஹெல் ஹௌலாடர் இஸ்மாயில் ஹௌலாடர், 29. படம்: ராய்ட்டர்ஸ்