எண் 59, சிராங்கூன் கார்டர்ன் வே முகவரியில் செயல்படும் போவ் சிங் கிச்சன் சாப்பாட்டுக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 10 பேர் வயிற்றுப் போக்கு காரணமாக பாதிக்கப் பட்டதாகத் தெரியவந்ததை அடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் வேளாண், உணவு கால்நடை ஆணையம் ஆகியவை கூட்டாக விடுத்த அறிக்கை இவ்வாறு தெரிவித்தது. போவ் சிங் ரெஸ்டாரெண்ட் கடையின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மேலும் 10 வயிற்றுப்போக்குப் பாதிப்புப் பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போவ் சிங் கிச்சன் கடையில் சாப்பிட்டவர்கள் தங்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர் என்று குறிப்பிட்ட கூட்டறிக்கை, இதனால் போவ் சிங் கிச்சன் கடையும் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதாக கூறியது. போவ் சிங் கிச்சன், போவ் சிங் குழுமத்தின் கீழ் செயல்படும் ஒன்றாகும். இதில் போவ் சிங் ரெஸ்டாரெண்ட்டும் ஒன்று. இந்த மாதம் 4ஆம் தேதிக்கும் 11ஆம் தேதிக்கும் இடையில் பலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையடுத்து போவ் சிங் ரெஸ்டாரெண்ட் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது.