முதல்நிலை ஒழுங்குமுறைப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ஒரு துணை நிறுவனத்தை (ரெக்கோ) ஏற்படுத்த இருப்பதாக சிங்கப்பூர் பங்குச் சந்தை அறிவித்துள்ளது. சிங்கப்பூர் பங்குச் சந்தையின் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இந்த முயற்சி இலக்காகக் கொண்டுள்ளது. தனது வர்த்தக, நடைமுறைப் பணிகளில் இருந்து ஒழுங்கு முறைப் பணிகளைப் பிரிப்பதன் மூலம் ஒரு சுயஒழுங்குமுறை நிறுவனமாக அது தன்னை அமைத்துக்கொள்ளும்.
2017 பிற்பாதியில் 'ரெக்கோ' நிறுவனம் நிறுவப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் பங்குச் சந்தை தெரிவித்தது. இந்தப் புதிய ஒழுங்குமுறை நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக தனியாக ஓர் இயக்குநர் சபை அமைக்கப்படும் என்றும் அந்த இயக்குநர்கள் சிங்கப்பூர் பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைச் சாராதவர்களாகவும் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரத்தையும் பெற்றிருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.