இணையம் வழி காதல் மோசடியில் ஈடுபட்டதாக 31, 40 வயதுடைய பெண்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறைக்குக் கிடைத்த மோசடிப் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, தேடுதல் வேட்டையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 41 வயது பெண் ஒருவர் கடந்த மே மாதம் முன்பின் அறிமுகமில்லா ஆடவர் ஒருவரிடம் இணையம் மூலம் பழக்கமானார். அந்த ஆடவரின் காதல் வலையில் அவர் சிக்குண்டதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வெளிநாட்டு வங்கி ஒன்றின் கணக்குக்கு சுமார் $78,000 மாற்றி விட இணங்க வைத்துள்ளார் அந்த ஆடவர். அதன் பின்னர் நண்பர் ஒருவரின் அறிவுரையின்படி அந்த மாது இந்தச் சம்பவம் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட பிடோக் பிரிவு காவல்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை பிடோக் ரோட்டில் சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரிடம் இருந்து $20,000 ரொக்கம் மீட்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. விசாரணை தொடர்கிறது.