பழைய மரம் ஒன்றின் காரணமாகத் தொடங்கிய வாய்ச் சண்டைகள், பின்னர் கைகலப்பாக மாறியதற்குக் காரணமான 71 வயது மூதாட்டி மீது நேற்று அரசு நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எஸ்ட்ரிட் ஹில் குடியிருப்பில் உள்ள மரம் தொடர்பிலான சண்டைகளுக்கான நான்கு குற்றச்சாட்டுகளையும் 2014ஆம் ஆண்டில் ஒருவரைத் தாக்கியதற்காக ஒரு குற்றச்சாட்டையும் கா ஷி யீ (படம்) எனும் அந்த மூதாட்டி எதிர்நோக்குகிறார்.
2014ல் திருவாட்டி ஷி, தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் 58 வயது திரு ரஃபாயல் சோங் என்பரை அவரது முகத்தில் குத்திக் காயப்படுத்தினார். மரம் தொடர்பான சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நடந்தது. எஸ்ட்ரிட் ஹில் குடியிருப்பிலுள்ள திரு நஸ்ரட் லுக்கஸ் என்பவரின் பங்களாவுக்குள் இருக்கும் பெரிய மரம் ஒன்றின் கிளைகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் திருவாட்டி ஷியின் வீட்டுக்குள்ளும் பரவியி ருந்தது. அந்த மரம் தொடர்பில் திருவாட்டி ஷி, திரு நஸ் ரட்டின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மரம் தொடர்பான வேலையைப் புரிந்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் திரு அன்கதி திருப்பதியுடன் ஒரு மணி நேரம் வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் திரு அன்கதி பாரந்தூக்கி மேடையில் இருந்து மர வேலையைச் செய்துகொண்டிருக்கையில் பாரந்தூக்கியின் இயக்க சாவியை எடுத்துக் கொண்ட திருவாட்டி ஷி, அவரைத் தளமேடையிலே ஒரு மணி நேரம் காக்க வைத்துள் ளார். தமது காரை திரு நஸ்ரட் மீது மோதுவதுபோல் ஓட்டி அவரைப் பயமுறுத்தியது, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியது போன்றவை மற்ற குற்றச்சாட்டுகள். இதன் தொடர்பில் கூடுதல் விசாரணையை நடத்த நேரம் தேவைப்படுகிறது என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டதால், திருவாட்டி ஷி $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் அடுத்த மாதம் 24ஆம் தேதி நடைபெறும்.