சிங்கப்பூரில் செயல்படும் பணம் அனுப்பும் நிறுவனம் ஒன்று $8,500 தொடர்பான சதித் திட்டம் ஒன்றை முறியடித்திருக்கிறது. 'ஸொ„ங்கூ ரெமிட்டன்ஸ்' என்ற அந்த நிறுவனம் இத்துடன் மூன்றாவது தடவை தில்லுமுல்லு காரியங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. அந்தக் கடையின் ஊழியரான வாங் மெய்சின் என்பவர் போலிசுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் 22 வயது ஆடவர் ஒருவர் வெளிநாட்டுக் கணக்கு ஒன்றுக்கு $8,500 தொகையை அனுப்பவிருந்ததைக் கண்டனர்.
"நல்ல வேளையாக பணம் அனுப்பப்படவில்லை. சரியான நேரத்தில் அந்தக் கடையின் ஊழியர்கள் செயல்பட்டதால் முழுத் தொகையும் தப்பியது. போலிசுக்கும் சமூகத்திற்கும் இடையில் இத்தகைய வலுவான உறவு இருப்பது குற்றச்செயல்களை எதிர்த்துப் போராடுவதில் நல்ல பலன்களைத் தருகிறது," என்று போலிஸ் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆடவருடன் தொலைபேசி மூலம் ஒருவர் தொடர்புகொண்டு அவருக்கு சட்டவிரோத பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும் போலிஸ் அதிகாரி ஒருவருடன் அதன் தொடர்பில் பேசும்படியும் சொன்னார்.
அதை நம்பி அந்த ஆடவர் போலிஸ் அதிகாரியிடம் பேசினார். அந்த போலி அதிகாரி ஒரு கணக்கிற்கு பணத்தை அனுப்பிவைக்கும்படி அந்த ஆடவருக்கு கட்டளையிட்டார். அதற்கு இணங்க அவர் பணத்தை அனுப்ப அந்த நிலையத்துக்குச் சென்றபோது எல்லா விவரங்களும் தெரியவந்தன. பணம் தப்பியது.