பயங்கரவாத மிரட்டல் வளர்ந்துவருவது குறித்த இருளார்ந்த நிதர்சனத்தையும் அத்தகைய தாக்குதல் நிகழ்ந்தால் சமூக ஒற்றுமையில் நேரக்கூடிய விளைவுகள் குறித்தும் தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் பேசினார். "பயங்கரவாதிகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு சமாளிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் அந்தப் பயங்கரவாதி சிங்கப்பூரராக இருந்துவிட்டால் நமது பல இனச் சமூகத்திற்கு ஆழமான நெருக்கடி ஏற்பட்டுவிடும்," என்று அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த நாடுகளில் மக்கள் இருவிதமாக எதிர்வினை புரிந்துள்ளனர்: ஒற்றுமையை வெளிப்படுத்தி அல்லது பயம், நம்பிக்கையின்மையின் உச்சத்தை வெளிப்படுத்தி. "சிங்கப்பூரில் எது நிகழும் என்பதே கேள்வி," என்றார் திரு லீ. "நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று சேர்ந்து தீர்வு காண்பதே அதற்குப் பதிலாக இருக்கிறது. தாக்குதல் நிகழ்வதற்கு முன்பாக, தற்போது நாம் எந்த அளவுக்கு நம்மைத் தயார்ப்படுத்தி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது அமையும். நம்பிக்கையை உருவாக்க, ஒற்றுமையை வலுப்படுத்த, நமக்கிடையேயான பொதுவான அம்சங்களை விரிவுபடுத்தி பராமரிக்க நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால் நாம் உள்ளுணர்வால் ஒரே மக்களாக உணர்வோம்," என்றார் திரு லீ.