புக்கிட் பாத்தோக்கில் உள்ள 'லிட்டில் கிரீன்ஹவுஸ்' பாலர் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் காசநோய் பரிசோதனை நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு அந்த நோய் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட் டது. சென்ற வியாழக்கிழமை அந்த ஆசிரியர் உடல்நலம் குன்றியதாகக் கூறி விடுப்பில் இருந்தார். மறுநாள் அந்த ஆசிரியர் தமக்குக் காசநோய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் என்று பாலர் பள்ளியின் செயலாக்கப் பிரிவின் துணைத் தலைமை அதிகாரி ரூத் குவா கூறினார்.
"எங்களின் குழந்தைகளின் சுகாதாரத்திற்குத்தான் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். உடனே நாங்கள் சுகாதார அமைச்சின் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு சென்ற சனிக்கிழமை ஆகஸ்ட் 20ஆம் தேதி பள்ளியின் சுற்றுசூழலை மதிப்பீடு செய்தோம். அதன் பின்னர், பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தோம்,'' என்றார் குவா. மேலும், இந்த விவரங்களை மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.