மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மூன்று நாய்க்குட்டிகளைத் தமது காரில் கடத்திக்கொண்டு வந்த 34 வயது ஆடவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீன் பண்ணை நடத்தும் லோ சீ சியாங் தமது காரின் ஒலிபெருக்கிப் பெட்டியில் அந்த மூன்று நாய்க்குட்டிகளை மறைத்து வைத்து சிங்கப்பூருக்குள் கடத்திக் கொண்டு வர முயன்றார். அந்த நாய்க்குட்டிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்ததாகவும் உட்லண்டஸ் சோதனைச் சாவடியைச் சேர்ந்த குடிநுழைவு அதிகாரிகள் அவற் றைக் கண்டுபிடித்தபோது அவை சுயநினைவின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வழக்கு வேளாண் உணவு, கால்நடை ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டது. உரிமம் இல்லாமல் உயிருள்ள விலங்குகளை இறக்குமதி செய்தது, விலங்குகளுக்குத் தேவையற்ற துன்பம் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை லோ ஒப்புக்கொண்டார். நாய்க்குட்டிகளை சிங்கப்பூருக்குள் கடத்திக்கொண்டு வந்து மார்சிலிங்கில் ஆடவர் ஒருவரிடம் ஒப்படைத்தால் தமக்கு 800 வெள்ளி கொடுக்கப்படும் என்று ஜோகூர் பாருவில் உள்ள செல்லப்பிராணிக் கடைக்காரர் ஒருவர் கூறியதாக லோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
செம்பவாங்கில் உள்ள வேளாண் உணவு, கால்நடை ஆணையத்தின் தனிமைப்படுத்தும் நிலையத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட நாய்க்குட்டிகள் 100 நாட்களுக்குத் தனிமைப் படுத்தப்பட்டன. நாய்க்குட்டிகளை எடுத்து வளர்க்க தகுந்த நபர்களைக் அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்க விலங்கு வதை தடுப்புச் சங்கத்துடன் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.