நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இணைந்து ரயில் பாதையில் சைகைக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் இரவுபகலாக ஈடுபட்டிருந்தாலும் வட்டப் பாதை ரயில் தடத்தில் பயணத் தடை நீடிக்கும் என்று நேற்று காலை கூறப்பட்டது. சென்ற திங்கட்கிழமை முதல் அந்தத் தடத்தில் பயணத் தடை ஏற்படுவதால் பயணிகளிடையே அதிருப்தி நிலவுகிறது. ரயில் உற்பத்தி நிறுவனமான அல்ஸ்தோம் உடன் இணைந்து குழுவாக செயல்பட்டாலும் ரயில் சேவையில் இருக்கும்போது தடத்தில் சோதனைகள் செய்ய இயலாத சூழலிருப்பதாக இவ் விரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
'ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் புறப்படுவதற்கு கூடுதல் நேரமெடுக்கக் கூடும்' என்று நேற்று காலை 6.56 மணியளவில் பயணிகளுக்கு டுவிட்டர் மூலம் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. பயணிகள் மாற்று வழிகளில் பயணத்தைத் தொடர நினைத்தால் அவர்களுக்கு வழிகாட்டு வதற்காக கூடுதல் ஊழியர்கள் நிலையங்களில் இருப்பர் எனவும் கூறப்பட்டது. சென்ற திங்கட்கிழமை காலை உச்ச நேரத்தில் ரயில் சேவைத்தடை ஏற்பட்டது. அதற்கு சைகைக் கோளாறு காரணம் என்று அன்றைய தினம் பிற்பகலில் கண்டறியப்பட்டது.