சீனாவின் சோங்கிங் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை நேற்றுச் சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையே நிலவும் அணுக்கமான நீண்டகால நட்புறவை இருநாட்டுத் தலைவர்களும் நேற்றைய சந்திப்பில் மறு உறுதிசெய்தனர். இரு நாடுகளின் அதிகாரிகளும் சிங்கப்பூர் -=சீனா குறித்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதை அவர்கள் சுட்டினர். அத்துடன் சோங்கிங் இணைப்புத் திட்டம் பற்றியும் அவர்கள் குறிப்பிட்டனர் என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.
இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று பிரதமர் லீ தெரிவித்தார். குறிப்பாக இந்தத் திட்டத்தில் நிதிச் சேவைகள் பற்றியும் விமானப் போக்குவரத்து இணைப்புப் பற்றியும் இரு நாட்டுத் தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். சோங்கிங் உட்பட சீனாவின் ஏழு மாநிலங்கள், நகரங்கள் தொடர்பாக அண்மையில் அறிவிக்கப்பட்ட தடையற்ற வர்த்தக வட்டாரத் திட்டத்தில் சிங்கப்பூர் பயனுள்ள பங்கை ஆற்ற முடியும் என்று சீன அதிபர் ஸி கூறினார். மேலும், அந்த 20 நிமிடச் சந்திப்பில் பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இருநாடுகளுக்கும் பயனுள்ள வழிகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இருவரும் இணக்கம் கண்டனர்.