ஜூரோங் பாயிண்ட்டில் உள்ள இரு என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களில் பலர் தள்ளுவண்டிகளைத் திரும்பக்கொண்டு வந்து வைப்பதில்லை. ஃபேர்பிரைஸ் ஊழியர்கள் அன்றாடம் 150 முதல் 200 தள்ளுவண்டிகளைத் தேடிச் சென்று எடுத்து வரவேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, ஃபேர்பிரைஸ் தள்ளு வண்டிகளைத் திருப்பிக் கொண்டுவந்து வைப்பது குறித்து ஊழியர்கள் வாடிக்கையாளருக்குக் எடுத்துச் சொல்வது, துண்டு அறிக்கைகளை விநியோகிப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த முன்னோடித் தள்ளுவண்டி அமலாக்கத் திட்டம் நேற்று ஜூரோங் பாயிண்ட் ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் தொடங்கப்பட்டது. இங்கு தான் ஆக அதிகளவில் தள்ளுவண்டிகள் திரும்ப வைக்கப்படுவதில்லை.
இங்கு தள்ளுவண்டி அமலாக்க அதிகாரிகள் பேரங்காடின் வெளி வாயிலிலும் தள்ளுவண்டி வைக்கும் இடங்களிலும் செயலில் இருப்பர். கடந்த 2015ல் ஃபேர்பிரைஸ் கிட்டத்தட்ட 1,000 தள்ளுவண்டிகளை இழந்தது. இதனால் புதிய தள்ளுவண்டிகளை வாங்குவது, பழுதுபார்ப்பது, காணாமல் போன தள்ளுவண்டிகளைத் தேடி எடுத்துவரும் ஊழியர்களுக்காகும் செலவு என ஃபேர்பிரைஸுக்கு $150,000க்கும் அதிகமாக செலவாகிறது. இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 20% கூடியுள்ளது.
ஜூரோங் பாயிண்ட் ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்கு வெளியே தள்ளுவண்டி அமலாக்க ஊழியர் கே.சுகுமாறன், 41, ஃபேர்பிரைஸ் வாடிக்கையாளர் தள்ளுவண்டியைத் திருப்பி வைக்க உதவுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்