ஸிக்கா, டெங்கி நோய்களைக் கட்டுப்படுத்த அந்த வைரஸை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அடியோடு துடைத்தொழிப்பது முக்கியம். கொசு பெருகும் இடங்களை அடியோடு ஒழிப்பதில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று சுற்றுப்புற நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். கொசு பெருகும் இடங்கள் மூன்றில் இரண்டு வீடுகளிலேயே காணப்படுகின்றன. மற்றவை பொது இடங்கள், கட்டுமானப் பகுதிகள் என்று அவர் கூறினார். "வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டில் கொசு வளரவிடுவதன் ஆபத்து தெரியாததால் அல்ல. சில நேரங்களில் வீட்டின் பூச்சாடிகளில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றாவிட்டால் அங்கு கொசு வளரும் என்பதை அவர்கள் உணர்வதில்லை," என்றார் அமைச்சர்.
கொசுக்களும் சுற்றுப்புறத்துக்கு நன்கு பழகிக்கொள்கின்றன. எங்கே தண்ணீர் கிடைக்கும் என்பது அவற்றுக்குத் தெரியும் என்று அவர் கூறினார். ஸிக்கா சாதாரண நோய் என்பதையும் அதன் அறிகுறிகள் டெங்கி அளவுக்கு மோசமானதல்ல என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் சுகாதார அமைச்சு சிறப்பாக செயலாற்றி உள்ளது. "எனினும், கருவுற்ற பெண்களுக்கு ஸிக்கா பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்," என்று திரு மசகோஸ் கூறினார்.
நாடெங்கும் ஸிக்கா விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரு வார முயற்சியின் ஒரு பகுதியாக தெம்பனிஸ் வெஸ்ட் சமூக நிலையத்தில் ஸிக்கா வைரஸ் குறித்த கையேடுகளை குடியிருப்பாளர்களிடம் நேற்று அவர் வழங்கினார். படத்தில் தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் உள்ள கோப்பிக் கடையில் விமானப் பணியாளரான திரு கே.மோகனிடம், 57, கையேடுகளை வழங்குகிறார் அமைச்சர் மசகோஸ். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்