வாக்களிப்பின்மூலம் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இதைச் செய்வதற்கு சில காரணங்கள் இருப்பதாக பிரதமர் கூறினார். முதலாவதாக, வாக்களிப்பின்மூலம் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை அமலாக்கியபோதே இந்தப் பிரச்சினை இருப்பது தெரியும். சொல்லப்போனால், அனைவருக்கும் தெரியும். மலாய்க்காரர் அல்லது இந்தியர் அதிபராக இருப்பது அதிக சிரமமாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தோம். ஆனால் தொடக்கத்தில், அதிக அவகாசம் இருப்பதாகக் கருதினோம். உடனடியான பிரச்சினையாக இல்லை. தேர்தல்களில் கடுமையான போட்டி இல்லை. அதிபராகக் கூடிய வேட்பாளர்களைச் சிரமப்பட்டுத் தேடினோம். இந்த முறை எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதற்கு 25 ஆண்டுகள் இருந்தன. ஒரே ஒரு சிறுபான்மை இன அதிபர், திரு நாதன், மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான சேவையாற்றினார். அவர் இரு முறையும் (1999, 2005) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்கப்பூரர் களின் இதயங்களில் இடம்பிடித்தார்.
எனினும், அவர் முதன்முதலில் வேட்பாளராக வந்தபோது சிங்கப்பூரர்களுக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாதநிலையில் தேர்தல் நடந்திருந்தால் முடிவு எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. அதைச் சொல்வது சிரமம் என்று விளக்கிய திரு லீ, 2011 தேர்தலில் கடுமையான போட்டி நிலவியதைக் குறிப்பிட்டார். "இத்தகைய தேர்தலில் சிறுபான்மை வேட்பாளருக்கு நியாயமான வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எதிர்காலத்திலும் அதிபர் தேர்தல்களில் இதுபோன்ற கடுமையான போட்டி நிலவும் என நான் எதிர்பார்க்கிறேன். இதனால் பிரச்சினை மேலும் மோசமாகும். இதுதான் இரண்டாவது காரணம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது என்று நினைக்கிறேன்," என்றார் அவர். "இது நான் செய்து முடிக்க வேண்டிய ஒன்று என்றும் அடுத்து வருபவரிடம் விட்டுச்செல்லக்கூடாது என்றும் நான் நினைப்பதே இந்தக் காரியத்தை இப்போதே நான் மேற்கொள்வதற்கான மூன்றாவது காரணம்," என்றார் அவர்.
"இது எனக்குப் பழக்கப்பட்ட நடை முறை, முதன்முதலில் இந்த நடைமுறையை நாங்கள் அறிமுகப்படுத்திய போது, இதை வடிவமைக்க நான் உதவினேன், இதை நடைமுறைப்படுத்துவதிலும் திருத்துவதிலும் மேம்படுத்துவதிலும் நான் அங்கம் வகித்திருக்கிறேன். இடையிடையில் தேவையான மாற்றங்கள் செய்து, நான் பிரதமராக இருந்த போது, திரு நாதன், டாக்டர் டோனி டான் ஆகியோருடன் செயல்படுத்தியிருக் கிறேன். "எனவே, இந்தப் பிரச்சினை பற்றி எனக்கு நன்கு தெரியும். இதைக் கையாளுவது எனது கடமை என்று நினைக்கிறேன். இது செய்யப்படவேண்டிய ஒன்று என்று நான் நம்புகிறேன். இதை நான் செய்ய விரும்புகிறேன். "இது சிங்கப்பூரின் நலனுக்காக நாம் செய்ய வேண்டிய ஒன்று என சிங்கப்பூரர் களை நம்ப வைப்பேன். இதை நாம் செய்யாவிட்டால், சிங்கப்பூருக்குப் பிரச்சினை ஏற்படும் என்று நினைக்கிறேன். இன்றல்ல, நாளையல்ல, ஆனால் கண்டிப்பாக 10, 15, 20 ஆண்டுகளில் பிரச்சினைகள் உருவாவதற்கு முன்பாக இப்போதே இதை நாம் செய்தாக வேண்டும்," என்றார் பிரதமர் லீ.