சுங்க வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை பதுக்கி வைத்திருந்த 61 வயது சிங்கப்பூரருக்கு இம்மாதம் 1ஆம் தேதி 6.6 மில்லியன் வெள்ளி அபராதமும் 38 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த முடியவில்லையென்றால் அப்துல் ரஷித் அப்துல்லா மேலும் 22 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று அப்பர் பாயா லேபார் ரோட்டில் உள்ள மாடி வீட்டில் சுங்கவரி செலுத்தாத சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து மேற் கொள்ளப்பட்ட சோதனையில் 2,400 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு செலுத்த வேண்டிய சுங்கவரி, பொருள் சேவை வரியின் மதிப்பு 204,990 வெள்ளி. விசாரணையில் திரு ரஷித் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது. கடந்த 2008ஆம் ஆண்டிலும் இதே போன்ற குற்றத்திற்காகத் தண்டனைப் பெற்று அவர் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார்.