மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் மூன்று மோட்டார்சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் ஒரு சிங்கப்பூரர் உட்பட மூவர் மரணம் அடைந்துள்ளனர். குளுவாங் வட்டாரத்தில் உள்ள கேஎம்45 விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 12.40 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக குளுவாங் போலிஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. சம்பவத்தின்போது 65 வயது முகம்மது ஹஸான் அலி, மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டிச் செல்ல அவருக்குப் பின்னால் சிங்கப் பூரரான 48 வயது நோராரிபென் சுர்னி அமர்ந்திருந்தார்.
அவர்களது மோட்டார்சைக்கிள் தாமான் ரியாவில் உள்ள ஒரு சாலை சந்திப்பில் 21 வயது முகம்மது ஹஃபிஸ் கசாலி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. அப்போது கசாலிக்குப் பின்னால், இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த முகம்மது எக்மால் யுஸ்ரி யாசின், கசாலியின் மோட்டார் சைக்கிளில் மோதினார். முகம்மது ஹசான், நோராரொபென், முகம்மது ஹஃபிஸ் ஆகியோர் சமபவ இடத்திலேயே உயிர் இழந்தனர் என்றும் முகம்மது எக்மால் யுஸ்ரி அருகில் உள்ள குளுவாங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் போலிஸ் அறிக்கை தெரிவித்தது.