இசை, மதுக்கூடம் ஒன்றை 'மோலோடோவ் காக்டெய்ல்' எனும் பெட்ரோல் குண்டை வீசி தீப்பற்ற வைக்க முயற்சி செய்ததாக நான்கு சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் இந்தச் செயலைப் புரிய அவர்கள் முயற்சி செய்ததாக நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 26 வயதான டோ வென் யி, பிரையன் ஹோ சாங் ரோங், 23 வயதான யூஜின் லிம் ஹுவாங் ஷென், சிஃபாஸ் ஹோ ஜின் ஆன் ஆகிய நால்வர் அந்த சந்தேக நபர்கள். செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.10லிருந்து 2.26க்கு இடைப்பட்ட நேரத்தில் 'செயின்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டேஷனில்' உள்ள 'பௌன்ஸ்' எனும் இசை, மதுக்கூடத்தின் முதன்மை நுழைவுவாயிலில் நான்கு பெட்ரோல் குண்டுகளை வீச இந்த நால்வரும் 26 வயதான டேரில் டே காய் லோங் என்பவருடன் சேர்ந்து செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக்காக ஒரு வாரம் காவலில் வைக்கப்படுவர்.
சம்பவ இடத்தில் கண்ணாடித் துண்டுகள் கிடந்ததை போலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மூவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட நான்கு மதுபான போத்தல்களைத் தீப்பற்றவைத்து எரிந்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. யாருக்கும் காயம் இல்லை. குற்றவியல் விசாரணைத் துறை, போலிஸ் புலனாய்வுத் துறை, கிளமெண்டி பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து பணியாற்றி சந்தேக நபர்களுள் ஒருவரை 20 மணி நேரத்துக்குள் கைது செய்தனர். மற்ற மூவரும் செவ்வாய், புதன் கிழமைகளில் பிடிபட்டனர். 2016-09-16 06:00:00 +0800