தொழில்நுட்பக் கல்விக்கழகக் கிழக்குக் கல்லூரியில் வியாழக்கிழமை நடந்த இரண்டு மணி நேர கலந்துரையாடலில் சமூகத் தலைவர்களும் அடித்தள தலைவர்களும் பல கேள்விகளை எழுப்பி னர். 300 பேர் கலந்துகொண்ட அந்தக் கலந்துரையாடலில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் கலந்துகொண்டார். அவரோடு தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான மாலிக்கி ஒஸ்மானும் கலந்துகொண்டார். மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிபர் முறைக்கான உத்தேச மாற்றங்கள், தகுதிக்கு முன்னுரிமை போன்ற சிங்கப்பூரின் அடிப்படை கோட்பாடுகளைக் கீழறுத்து விடுமா என்றும் அந்த மாற்றங்கள் காரணமாக அதிபர் பதவி பலவீனம் ஆகிவிடுமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் சிலர் குறை கூறினாலும் அந்த மாற்றங்கள் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நல்லது என்று அரசாங்கம் கருதினால் அவற்றை அரசாங்கம் அமல்படுத்தும் என்று குறிப்பிட்டார். குழுப் பிரதிநிதித்துவத் தொகுதி முறையை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவர், அந்த முறை நல்ல நம்பிக்கையோடும் நேர்மையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதால் பலன் தந்திருக்கிறது என்றார். உத்தேச மாற்றங்கள் தகுதிக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டை சிதைத்துவிடுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அப்படி நடக்காது என்றார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அரசாங்கத்திற்குப் பிடிக் காத வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிடாதபடி செய்வதை நோக்கமாகக் கொண்டவையா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், இப்போதைய நிபந் தனைபடி பார்க்கையில் 1,000 பேருக்கும் அதிக தனியார் துறையினர் வேட்பாளர்களாக ஆக தகுதி பெறுகிறார்கள். நிபந்தனை கடுமையாக்கப்படும்போது இவர்கள் அனைவரும் புதிய நிபந்தனைகளுக்கும் தகுதி பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றது என்றார்.