முறையற்ற வகையில் தூக்கமாத்திரைகளை நோயாளிக்குப் பரிந்துரைத்ததாகக் கூறும் பல குற்றச்சாட்டுகளின் பேரில் டாக்டர் ஹெங் பூன் வா ஜோசப், 66, என்ற தனியார் மருத்துவருக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நான்கு மாதம் தொழில் நடத்தக்கூடாது என்று அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரங்களில் மொத்தம் 78 நோயாளிகள் சம்பந்தப்பட்டிருந்தனர். பிடோக் ரிசர்வோயர் ரோட்டில் உள்ள ஹெங் கிளினிக் & சர்ஜரி என்ற மருந்தகத்தில் மருத்துவ ராகப் பணியாற்றும் டாக்டர் ஹெங், 47 குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் மருத்துவ மன்றம் நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. இந்த மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அந்த மருத்துவருக்கு எதிரான இதர 31 குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டுகள், நோயாளிகளுக்குத் தூக்கமாத்திரையை ஏற்பில்லாத வகையில் பரிந்துரைத்தது, நோயாளிகளைச் சிறப்பு மருத்துவரிடம் அல்லது மனோவியல் மருத்துவரிடம் அனுப்பத் தவறியது தொடர்பானவை. சுகாதார அறிவியல் ஆணையம் 2011 டிசம்பர் 30ஆம் தேதி ஒரு புகார் செய்திருந்தது. அதன் விளைவாக டாக்டர் ஹெங்கை ஜூலை 26ஆம் தேதி தான் விசாரித்ததாக இந்த மன்றம் குறிப்பிட்டது.