டெம்பனிஸ், பாசிர் ரிஸ், யீஷுன், செம்பவாங், தாமான் ஜூரோங் ஆகிய ஐந்து பேட்டைகளில் சைக்கிள் புழக்கத்தை எளிதாக்கும் வகையில் அதற்கான பாதைக் கட்டமைப்பை வசதிகளுடன் கூடிய புதிய முறையில் உருவாக்குவதற்கு நிலப் போக்குவரத்து வாரியம் குத்தகையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சைக்கிள் நிறுத்தம், போக்குவரத்துச் சந்திப்புகளில் சைக்கிள்கள் எளிதாக சாலையைக் கடப்பதற்கான வசதிகள், சைக்கிளோட்டிகளுக்கான ஒருமுகப்படுத்தப்பட்ட அறிவிப்பு வாசகங்கள் உள்ளிட்டவை இந்த புதிய கட்டமைப்பில் அடங்கும். அக்கம்பக்கப் பேட்டைகளுக்கு மக்கள் எளிதில் சென்றுவரக்கூடிய வசதியைப் பெறுவதன்மூலம் குடியிருப்புப் பேட்டைகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த இந்தக் கட்டமைப்பு உதவும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் கிளமெண்டி, ஹவ்காங், மார்சிலிங், பிரோமினாட், செங்காங் ஆகிய பேட்டைகளிலும் சைக்கிளோட்டப் பாதைகள் பூங்காக்களுடன் இணைக்கப்படும். பீஷான், புவாங்காக், டகோட்டா, டோவர், பொத்தோங் பாசிர், உட்லண்ட்ஸ், இயூ டீ ஆகிய இடங்களில் ஏற்கெனவே சைக்கிளோட்டிகளுக்கென தனிப்பாதையும் பாதசாரிகளுக்கென தனிப்பாதையும் அமைக்கப் பட்டுள்ளன. தாமான் ஜூரோங்கில் இப்போது 5.4 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள சைக்கிளோட்டப் பாதை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்படவுள்ளது. இதற்கான பணி 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2020ல் நிறைவுபெறும் என்று வாரியம் தெரிவித்தது. இந்த நீட்டிப்பின் வழி தாமான் ஜூரோங் குடியிருப்பாளர்கள் அருகேயுள்ள லேக்சைட் எம்ஆர்டி நிலையம், ஜூரோங் லேக் பகுதிகளுக்கு எளிதாக சைக்கிளில் சென்று வரலாம். அதிகமானோர் சைக்கிளைப் பயன்படுத்தும் வகையில் இந்தத் தொகுதியில் சைக்கிள் பகிர்வுத் திட்டம் ஒன்றையும் அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் வாரியம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.