ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் ஹோட்டல் துறை பணிகளுக்கு ஊழியர்களை ஈர்க்கும் வகையில் இரண்டு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுள் புதிய திறன் கட்டமைப்புப் பணி பயிற்சி மூலம் ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்குவதும் அடங்கும். மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று சன்டெக் சிட்டி மாநாடு, கண்காட்சி நிலையத்தில் நடந்த ஹோட்டல் துறைக்கான வேலைக் கண்காட்சி ஒன்றில் இந்த இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார். "எதிர்காலத்தில் நமது ஹோட்டல்கள் விருந்தினர்களுக்கு மட்டும் புதிய, சிறந்த சேவைகளை அளிப்பதாக இருக்கமாட்டா. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடியதாகவும் இருக்கும்," என்றார் அமைச்சர் லிம்.
சேவைத் துறையில் ஊழியர் சந்தை பற்றிய மோசமான நிலவரம் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து மனிதவள அமைச்சரின் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. 35,000 பேர் பணியாற்றி வரும் ஹோட்டல் துறையில் 2,100 வேலைகள் காலியாக உள்ளன. அவற்றில் 40 விழுக்காட்டு வேலைகள் மேலாளர்கள், திறனாளர்கள், உயர் அதிகாரிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கானவை. தேசிய அளவில் தொடங்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃப்யூச்சர் திட்டத் தின் அடிப்படையில் முதன்முதலில் ஹோட்டல், தங்கும் விடுதிச் சேவை ஆகிய துறைகளில் பணிபுரிவோருக்காக திறன் கட்டமைப் புப் பணி பயிற்சி வழங்கப்பட்டது. ஊழியர்கள் தாங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கான குறிப்பிட்ட திறனைப் பெறுவது, செய்யும் வேலையில் முன்னேற்றம் காண்பது போன்றவற்றுக்கு உதவும் வகையில் இந்த வழிகாட்டித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சன்டெக் சிட்டி மாநாடு, கண்காட்சி நிலையத்தில் நேற்று நடந்த 'ஹோட்டல் தினம் 2016'ல் கலந்து கொண்டார் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே. ஹோட்டல் நிர்வாகக் கல்வியில் பட்டயக் கல்வி பயிலும் மாணவர் சோ ஷாங் நெங் அமைச்சருக்கு பரிமாறுகிறார். படம்: எஸ்பிஎச்