வில்சன் சைலஸ்
உயர்நிலைக்குப் பிந்திய கல்விக்குத் தகுதி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேநேரத்தில் சிறந்து விளங்காத மாணவர்களையும் நினைவில் கொள்வது முக்கியம் என்று சிண்டாவின் தலைவர் குமாரி இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். குடும்ப, சமூகச் சூழல் போன்ற காரணங்களுக்காக எவருக்கும் கல்வி கிடைக்காமல் போய் விடக் கூடாது. அனைவருக்கும் கல்வி கிடைக்க சிண்டாவின் உதவி இருக்கிறது என்றபோதும் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒட்டு மொத்த சமூகமும் செயல்பட்டு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும் என்றார் அவர். சிண்டாவின் உன்னத விருது வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்ட, நிதி அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சருமான இந்திராணி ராஜா, கூடுதலான இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இதுபோன்ற விருதுகள் ஊக்குவிக்கும் என்று கூறினார்.
2000ஆம் ஆண்டு உயர்நிலைக்குப் பிந்திய கல்வியை 74.9% இந்திய மாணவர்கள் மேற்கொண்டனர். 2014இல் இந்த எண்ணிக்கை 94.6% ஆக உயர்ந்துள்ளது. உன்னத விருது பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இவ் வாண்டு ஆக அதிகம் என்ற அவர், கூடுதலான மாணவர்கள் உயர்நிலைக்குப் பிந்திய கல்வியை மேற்கொள்வதை இது குறிக்கிறது என்றார். தொடக்கநிலை மாணவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை மொத்தம் 466 பேர் இவ்வாண்டு சிண்டா உன்னத விருதுகளைப் பெற்றனர்.
சிறப்பு விருந்தினராக வருகையளித்த பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து தேசியப் பல்கலைக்கழக சட்டத் துறை பட்டதாரியான ஹைரூல் ஹக்கீம் சிண்டாவின் உன்னத விருதைப் பெறுகிறார். தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரியும் ஹக்கீம் மூன்றாவது முறையாக சிண்டா உன்னத விருது பெறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்