பாதுகாப்பின்றி சாலைகளில் சைக்கிள், மின்சார ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை ஓட்டிய குற்றத்திற்காக 700க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மே மாதம் முதல் பிடிபட்டுள்ளனர் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. சாலைகளில் பாதுகாப்பின்றி சைக்கிள் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களைக் கண்காணிக்க சென்ற மே மாதம் ஆணையம் நிறுவிய துடிப்புடன் நடமாடும் அமலாக்கக் குழு இதுவரை 400க்கும் மேற்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பின்றி ஓட்டுபவர்களுக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போது ஆலோசனைகளுடன் பாதுகாப்பு பயணக் கையேடுகளையும் வழங்கி வருகிறார்கள்.
இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டம் நடப்புக்கு வந்தால், இவ்வாறு பாதுகாப்பின்றி வாகனங்களை ஓட்டுபவர் களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தை இவர்கள் பெறுவார்கள். மேலும் குறுகிய பயணங்களுக்கு சைக்கிள், மின்சார ஸ்கூட்டர் போன்ற வாகனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்தகைய வாகனங்களை நடைபாதைகளில் ஓட்ட புதிய சட்டம் வழிவகுக்கும். கடந்த மாதம் சைக்கிள்கள், மின்சார ஸ்கூட்டர்கள் போன்றவற்றால் சாலைகளில் நிகழ்ந்த தொடர் விபத்துக்களைத் தொடர்ந்து, போக்குவரத்து போலிசும் நிலப்போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் தாமான் ஜூரோங்கில் அமலாக்க நடவடிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர். சைக்கிள், மின்ஸ்கூட்டர் ஒட்டுநர்களுக்குப் பாதுகாப்புக் கையேடுகள் வழங்கப்பட்டன.
துடிப்புடன் நடமாடும் அமலாக்கக்குழுவை சேர்ந்த அதிகாரி நடைபாதையில் சென்ற மின்சார ஸ்கூட்டரை நிறுத்திப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்