கடந்த பத்தாண்டுகளில் தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் (பிஎஸ்எல்இ) தேர்ச்சி பெற்று உயர்நிலைக் கல்விக்குத் தகுதி பெற்ற இந்திய மாணவர்களின் விகிதம், மற்ற இனத்தவரைக் காட்டிலும் அதிக மேம்பாடு கண்டுள்ளது. 2006ஆம் ஆண்டை ஒப்புநோக்க, சென்ற ஆண்டில் பிஎஸ்எல்இ தேர்வில் இந்திய மாணவர் களின் தேர்ச்சி விகிதம் 2.1% அதிகரித்தது. 2006ல் பிஎஸ்எல்இ தேர்வெழுதிய இந்திய மாண வர்களில் 95.9 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர். இதே காலகட்டத்தில், சீன மாணவர்களின் தேர்ச்சி 0.3 விழுக்காடும் மலாய் மாணவர்களின் தேர்ச்சி 0.6 விழுக்காடும் கூடின. முந்தைய 2014ஆம் ஆண்டில் பிஎஸ்எல்இ தேர்வில் இந்திய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.8 விழுக்காடாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த வருடாந்திர புள்ளி விவரத்தை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, பிஎஸ்எல்இ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்வு கண்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் 97.6 விழுக் காடாக இருந்த தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டு 98.3 விழுக்காடாக அதிகரித்தது. பத்தாண்டுகளுக்கு முன் இவ்விகிதம் 97.7 விழுக்காடாக இருந்தது. அதேபோல, 'ஏ' நிலை, 'ஓ' நிலைத் தேர்வுகளிலும் சிங்கப்பூர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மேம்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. சென்ற ஆண்டில் 93.1% 'ஏ' நிலை மாணவர்கள், பொதுத் தாள் அல்லது அறிவுசார் ஆய்வுப்பாடத் தில் தேர்ச்சி பெற்றதுடன் குறைந்தது மூன்று 'எச்2' தேர்ச்சி நிலைகளையும் பெற்றனர். 2006ஆம் ஆண்டை ஒப்புநோக்கும்போது இது 6.1% அதிகம். அவ்வாண்டில் 87% மாணவர்களே இத்தகைய தேர்ச்சி நிலைகளைப் பெற்றிருந்தனர்.