தொழிலாளர் சந்தை மெதுவடைந்துள்ள இக்காலகட்டத்தில் நடு வயது வாழ்க்கைத் தொழில் மேம்படுத்தப்பட்ட மானியத் திட்டம் அதிக பொருத்தமானதாக இருக்கிறது என்று ஸ்கில்ஸ்ஃப்யூச்சர் சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி திரு இங் செர் போங் கூறியுள்ளார். கடந்த அக்டோபரில் இந்த மானியம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரையில் 52,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் பயன் அடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார். பொங்கோல், வாட்டர்வே பாயிண்ட் கடைத்தொகுதியில் நடைபெற்ற சாலைக்காட்சியில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "பொருளியல் மறுகட்டமைப்பும் வர்த்தகங்களின் நிலையற்ற நிலைமையும் காணப்படும் இந்நேரத்தில், தற்போதைய வேலைகளுக்கு ஏற்ற திறன்களை மட்டுமின்றி எதிர்காலத் தொழில்களுக்கான திறன்களையும் கைக்கொண்டிருக்க வேண்டியது முக்கியம்," என்றார்.
40 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள சிங்கப்பூரர்கள் தங்கள் வேலைத் திறன்களை மேம்படுத்த இத்திட்டம் வழி அதிக மானியத்தைப் பெறலாம். அரசாங்கமும் ஸ்கில்ஸ்ஃப்யூச்சர் சிங்கப்பூரும் அங்கீகரிக்கும் 8,000க்கும் மேற்பட்ட பயிற்சித் திட்டங்களுக்கு 90% வரை மானியம் பெறலாம்.