சிங்கப்பூரில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட பொது உடல்நலப் பரிசோதனைகளில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு தீரா நோய் வரக்கூடிய அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் சுகாதார பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்ற சுகாதாரத் துணை அமைச்சர் லாம் பின் மின், "கடந்த ஆண்டில் 46 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு தீரா நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென் பட்டன," என்று தெரிவித்தார். "இது அதிகமான நோய் விகிதம். எனினும், உடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முதல் அடிதான் பரிசோதனை," என்றும் அவர் சுட்டினார். 'தேசிய பல்கலைக்கழக யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியின் பொதுச் சுகாதாரச் சேவை' என்ற ஆண்டு உடல்நலப் பரிசோதனை நிகழ்ச்சியை 11வது ஆண்டாக தேசிய பல்கலைக்கழக மருத்துவத் துறை மாணவர்கள் நடத் தினர்.
கிளமெண்டி அவென்யூ 3ல் நேற்றும் இன்றும் காலை 10 மணி முதல் இந்தப் பொது உடல்நலப் பரிசோதனை நடைபெறுகிறது. 40 வயதும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இதில் கலந்துகொள்ளலாம். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் புதிதாக செவிப் புலன் சோதனையும் சேர்க்கப்பட்டுள்ளது. 60 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் இச்சோதனையைச் செய்து கொள்ளலாம். பரிசோதனையில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு தென்பட்டால், அவர் கூடுதல் பரிசோதனைக்காக தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையின் நகரும் செவிப் புலன் மருந்தக பேருந்துக்கு பரிந்துரைக்கப்படுவார். இந்தப் பேருந்து கிளமெண்டியில் வேறு இருநாட்களில் செயல்படும்.
பொது உடல்நல பரிசோதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருடன் உரையாடுகிறார் சுகாதாரத் துணை அமைச்சர் லாம் பின் மின் (இடது). படம்: என்யுஎச்எஸ்