நீல நிற லம்போகினி கார் ஒன்றை விரைவுச் சாலையில் கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்ற ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் ஒன்றாம் தேதி ஆபத்தான முறையில் கார் ஓட்டிச் சென்றதற்காக 45 வயது ஆடவரைக் கைது செய்ததாக போலிஸ் பேச்சாளர் நேற்று தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டவர் அந்த காரின் உரிமையாளரா என்பது தெரியவில்லை. ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் நிகழ்ந்த இச்செயலை ஹெங் சீ மெங்கின் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா படம்பிடித்தது.
இம்மாதம் இரண்டாம் தேதி ஹெங் சீ மெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய அந்தக் காணொளியை இதுவரை 120,000 பேர் பார்வையிட்டுள் ளனர். மேலும், 1,700 முறை அது பகிரப்பட்டுள்ளது. இரண்டு கார்களுக்கு இடையிலான குறைந்த இடைவெளியில் நீல நிற லம்போகினி கார் சீறிப்பாய்ந்து முந்திச் செல்வதை அந்தக் காணொளி காட்டுகிறது. குடும்பத்துடன் பயணம் செய்துகொண்டிருந்த ஹெங் தமக்கு இந்தச் செயல் மிகுந்த அச்சத்தை விளைவித்ததாகக் கூறியுள்ளார். சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.