மனிதவள நிபுணர்களின் திறன்களுக்கு சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு இரண்டாம் காலண்டில் நடைமுறைக்கு வருமுன் இம்மாத இறுதியில் சோதனை அடிப்படையில் அறிமுகம் காணவுள்ளது. மனிதவளத் துறையில் ஒரு முகமான தரவரிசையை ஏற்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக இந்த தேசிய மனிதவள சான்றிதழ் கட்டமைப்பு விளங்குகிறது. எதிர்காலப் பொருளியலுக்குத் தேவைப்படும் மனிதவளத்திற்கு உதவ தற்பொழுது மனிதவளத் துறையில் இருப்பவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அவர்களின் திறன்களை வளர்க் கவும் மதிப்பளிக்கவும் இந்த கட்டமைப்பு செயல்படும் என்று மனிதவள அமைச்சர் திரு லிம் சுவீ சே தெரிவித்துள்ளார்.
ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோ சாவில் நடைபெற்ற ஆசிய மனித வளத்துறை மாநாட்டில் அமைச்சர் பேசினார். நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை மனிதவளமாக மட்டும் கருதாமல் மனித முதலீடாகவும் கருத ஊக்குவிக்க வேண்டும் என அவர் கூறினார். புதிய கட்டமைப்பு மனிதவள நிபுணர்களைத் தங்களின் முத லாளிகளுடன் இணைந்து நிறுவன வணிகத் திட்டங்களில் உதவ வழிவகுக்கும் என்றார் அமைச்சர். மனிதவள துறை, அரசாங் கம், கல்வியாளர்கள் அடங்கிய 17 பிரதிநிதிகளைக் கொண்ட பணிக்குழு இக்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மனிதவளத் துறை, வர்த்தகத் துறை ஆகிய வற்றைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட தலைவர்களிடம் கலந்துபேசி இவர்கள் இந்த புதிய கட்டமைப்பை உருவாக்கினர்.
இந்த மாதம் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் சோதனை அடிப்படைத் தேர்வில் சுமார் 100 மனிதவள நிபுணர்கள் பங்கேற்பர். மனிதவள அடிப்படைத்திறன், செயல்திறன், மனப்போக்கு ஆகிய மூன்று அம்சங்களில் அவர்கள் மதிப்பிடப்படுவர். சான்றிதழ் பெறுவது கட்டாயமில்லை என்றாலும் சிங்கப்பூரில் இருக்கும் சுமார் 43,000 மனித வளத்துறை நிபுணர்கள் அனைவரையும் காலப்போக்கில் சான்றிதழ் பெற பணிக்குழு ஊக்கப் படுத்தப்போவதாகக் கூறியது.