தனியார் துறையில் சிகிச்சைக்காகும் செலவு, பொது மருத்துவமனைகளில் தனியார் நோயாளிகள் செலுத்துவதைவிட மிக அதிகமாக உள்ளது. இதற்கு கட்டண வழிகாட்டி முறை இல்லாததுடன் பெரும்பாலும் காப்புறுதி நிறுவனங்களே செலவை ஏற்றுக்கொள்வதும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால் காப்புறுதி நிறுவனங்கள் அதிக கட்டணங்களைக் கட்ட வேண்டியுள்ளது. எனவே அவை மக்கள் செலுத்த வேண்டிய சந்தா தொகையை உயர்த்து கின்றன. அதிகரித்து வரும் சுகாதாரக் கட்டணங்களைக் குறைக்கும் நோக்கில், சிங்கப்பூர் ஆயுட் காப்புறுதி நிறுவனம், சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த 11 பேர் கொண்ட பணிக் குழு நேற்றுத் தனது பரிந்துரைகளை வெளியிட்டது.
அந்தப் பரிந்துரைகளில் சில: போட்டித்தன்மைக்கு எதிரானது என்று தற்போது கட்டண வழிகாட்டி முறை நடப்பில் இல்லை. இதனை மாற்றி கட்டண வழிகாட்டி முறைகளை செயல்படுத்தி, அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணங்களை காப்புறுதி நிறுவனங்கள் கண்டுபிடிக்க உதவுவது. பொருத்தமற்ற அல்லது தேவையில்லாத மருத்துவ சிகிச்சைகளுக்கு எதிராக காப்புறுதி நிறுனங்கள் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திடம் புகார் செய்ய ஏதுவாக தற்போதைய வழிமுறைகளைச் சீர்படுத்துவது.
செலவுகளைக் கட்டுக்குள் வைக்க ஏதுவாக காப்புறுதி நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்புடைய மருத்துவ சேவையாளர்களைத் தேர்வு செய்ய அனுமதிப்பது. மற்ற நாடுகளில் இந்த நடைமுறை உள் ளது. காப்புறுதி நிறுவனங்களின் பட்டியலில் இல்லாத மருத்துவர்களையோ, மருத்துவமனைக ளையோ நோயாளிகள் நாடலாம். ஆனால் காப்புறுதி நிறுவனங்களிடம் பெறக்கூடிய தொகையை அது பாதிக்கும். ஒட்டுமொத்த மருத்துவ கட்டணத் தொகையையும் பெறக் கூடியதாக கூடுதல் காப்புறுதி பாதுகாப்பை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. 2011ல் ஐவரில் ஒருவராக இருந்த அந்த எண்ணிக்கை தற்போது மூன்றில் ஒருவர் இத்தகைய கூடுதல் பாதுகாப்பைப் பெற்று உள்ளனர்.