முஹம்மது ஃபைரோஸ்
சிங்கப்பூரில் வாழ்க்கைத் தரமும் மருத்துவ வசதிகளும் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் வாழ்நாளும் அதிகரித்துள்ளது. இதனாலேயே ஓய்வுக்காலத்திற்காக சேமிக்கும் பழக்கத்தை இளம் பருவத்திலிருந்தே ஏற்படுத்த வேண்டும் என்றும் அதைத்தான் மத்திய சேம நிதித் திட்டம் செய்கிறது என்றும் கூறியுள்ளார் மனித வள அமைச்சர் லிம் சுவீ சே. 'மசேநிதி எதற்காக இருக்கிறது?' எனும் தலைப்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 'பிஏ காப்பி டாக்' கலந்துரையாடலில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மசே நிதி திட்டத்தைப் புரிந்துகொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதால் அத்திட்டம் எளிமைப் படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மசேநிதி திட்டம் உள்ளிட்ட அரசாங்கக் கொள்கைகளைக் குடியிருப்பாளர்களிடம் எளிய முறையில் சேர்ப்பதில் அடித்தளத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றார்.
அடித்தள மன்றத்தில் தமிழில் நடத்தப்பட்ட இக்கலந்துரையாடலில் 150க்கு மேற்பட்ட அடித்தளத் தலைவர்கள் பங்கெடுத்தனர். மசே நிதி குறித்து தங்களது குடியிருப்பாளர்களின் சார்பில் சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளவும் கருத்துகளைப் பதிவுசெய்ய வும் கலந்துரையாடல் வாய்ப்பாக அமைந்தது.
தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் திரு வீ. பழனிச்சாமி கலந்து ரையாடலை வழிநடத்த, தமிழ் முரசின் துணை செய்தி ஆசிரியர் திரு தமிழவேல், ஓய்வுக்காலத்தில் சுகாதார பராமரிப்புக்குப் போது மான பணம் இருப்பது, அன்றாடச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது, காலத்திற்கேற்ப மசே நிதி வட்டியுடன் வளரும் முறை, மசே நிதி கவனிக்கும் மூன்று அடிப்படை தேவைகள் போன்ற அம்சங்களைப் பற்றி விளக்கினார்.
தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில், அமைச்சர் லிம்முடன் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், மனிதவள அமைச்சின் வருமான பாதுகாப்பு, கொள்கை பிரிவுக்கான இயக்குநர் ஷான் கோ, மசேநிதி கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் சீ பெங் ஆகியோர் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
தாம் 55 வயதை எட்டும்போது மசே நிதி கணக்கில் சேமிப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஓய்வுக்காலத் தொகைக்கும் குறைவாக இருந்தாலும் அவசர செலவுகளுக்காக அதில் பாதித் தொகையை எடுக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தார் திரு எம்.பி. மஹாராஜ். அதற்குப் பதிலத்த திரு லிம், "55 வயதில் உங்கள் கணக்கில் $50,000 இருக்கும் பட்சத்தில் அதில் பாதித் தொகையை எடுத்து விட்டீர்கள் என்றால் மீதம் $25,000 மட்டுமே இருக்கும். நீங்கள் 90 வயது வரை வாழ நேரிட்டால் மீதமுள்ள தொகை உங்களுக்குப் போதாது," என்றார். மக்களின் மசே நிதி பணம் உங்களைவிட்டு ஓடிவிடப்போவதில்லை என்ற அவர், அதற்கு மேலாக மசே நிதி லைஃப் திட்டத் தின்கீழ் சேமிப்பு நல்ல வட்டி விகிதத்தை ஈட்டி மேன்மேலும் வளரும் என்று உத்தரவாதம் அளித்தார்.
வலமிருந்து மனிதவள அமைச்சின் வருமானப் பாதுகாப்பு, கொள்கைப் பிரிவுக்கான இயக்குநர் ஷான் கோ, தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் திரு வீ. பழனிச்சாமி, மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், மசே நிதிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் சீ பெங், தமிழ் முரசு துணைச் செய்தி ஆசிரியர் தமிழவேல். படம்: திமத்தி டேவிட்