சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான எஸ்எம்ஆர்டியை முழுமையாக வாங்குவதற்கு உயர் நீதிமன்றம் தெமாசெக் ஹோல்டிங்ஸுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் தெமாசெக் ஹோல்டிங்ஸ் பெற்றுக் கொள்ளும் என்பதால், சிங்கப்பூர் பங்குச் சந்தையிலிருந்து அது விலகிக் கொள்ளும். எஸ்எம்ஆர்டி பங்கு பரிவர்த்தனை நடைபெறும் இறுதி நாள் இன்று அக்டோபர் 18ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்எம்ஆர்டி பங்குகளை வைத்திருப்போருக்கு அதற்கான தொகை நவம்பர் 1ஆம் தேதிக்குள் அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு எஸ்எம்ஆர்டி நிறுவனம் சிங்கப்பூர் பங்குச் சந்தை பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்களிப்பில் எஸ்எம்ஆர்டி பங்குதாரர்கள் அந்நிறுவனத்தை தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் முழுமையாக வாங்கிக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் எஸ்எம்ஆர்டி நிறுவனம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கத்தின் வசம் சென்றுவிடும். அதே வாக்களிப்பு நாளில் பங்குதாரர்கள் எஸ்எம்ஆர்டி தனது செயல்முறை சொத்துகளை நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் $1 பில்லியனுக்கு விற்க பெரும்பான்மையாக வாக்களித்தனர்.