தேசிய இளையர் சாதனை தங்க விருது நேற்று 154 பேருக்கு வழங்கப்பட்டன. அதிபர் டோனி டான் கெங் யாம் அந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். தொழில்நுட்பக் கல்விக்கழக தலைமையகத்தின் டே எங் சூன் மாநாட்டு நிலையத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விருதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு வயது 14 முதல் 25 வரை. உள்ளூர், வெளிநாடுகளில் பல செயல் திட்டங்களில் கலந்துகொண்டவர்கள், தேர்ச்சி மேம்பாடு, விளையாட்டு, சமூக அடிப்படையிலான திட்டங்களை உருவாக்கியவர்கள் ஆகிய இளம் சமூகத் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தப் பணிகளை நிறைவு செய்ய குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகாலம் வழங்கப்படும். இளையர்களுக்கு, வகுப்பறைக்கு வெளியே பயனுள்ள அனுபவங்களை ஏற்படுத்தித் தரும் வகையில் தேசிய இளையர் சாதனை விருது திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட முறையிலும் சமூகத் தலைவர்களாகவும் பரிணமிக்க இளையர்களுக்குத் தேவைப்படும் இன்றிமையாத வாழ்க்கைத் தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த விருது ஊக்குவிக்கிறது என்று விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வி மற்றும் தொடர்பு, தகவல் துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
விருதுபெற்றவர்கள் சிலருடன் அதிபர் டோனி டான் கெங் யாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்