ஹாங்காங்கை ஹாய்மா சூறாவளி மிரட்டியதன் காரணமாக நேற்று சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் செல்லவிருந்த எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நேற்றுக் காலை 9 மணி நிலவரப்படி இதர ஒன்பது சேவைகளின் நேரம் மாற்றப்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டைகர்ஏர், யுனைடெட் ஏர்லைன்ஸ், ஜெட்ஸ்டார் ஆசியா, கத்தே பசிபிக் ஆகிய விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த எட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. அவற்றில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவைகளும் அடங்கும். ஹாங்காங்கை நோக்கி சூறாவளி நகர்வதால் ஹாங்காங்கிற்கு வந்து செல்லும் 200க்கும் அதிக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஹாங்காங் தகவல்கள் குறிப்பிட்டன.
"விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு வேறு எஸ்ஐஏ விமான சேவைகளில் வசதி செய்து தரப்படும். நிலவரம் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதால் பயணிகள் விமானம் புறப்படுவது பற்றிய தகவல்களை எங்கள் இணையத் தளத்தில் தெரிந்துகொள்ளலாம். அல்லது பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முன்பதிவு அலுவலகத் துடன் தொடர்புகொள்ளலாம்" என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு ஆலோசனை கூறியது.