தம்மைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக சமூக அரசியல் இணையத் தளமான 'ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவ்யூ' மீது போலிசில் அவதூறு புகார் கொடுக்கப் போவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 'ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவ்யூ' இணையத்தளத்தின் பெயர் குறிப்பிடாத செய்தி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொள்கை ஆய்வுக் கழகக் கருத்தரங்கு பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த கருத்தரங்கில் 'அதிபர் தேர்வு சட்டத்தின் கீழ் அனைத்து யுரேசியர்களும் இந்தியர்களே' என்றும் 20 இந்தியர்களுக்கு ஒரு யுரேசியர் இங்கு இருப்பதால் ஒரு யுரேசியர் அதிபராவது சிரமம் என்று தாம் கூறியதாக அந்த 'ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவ்யூ' இணையத்தள செய்தி குறிப்பிட்டது.
இவை யாவும் முற்றிலும் தவறான கருத்து என்றும் இந்த பொய்யைக் கண்டு தாம் அதிர்ச்சியுற்று இருப்பதாகவும் கூறிய அமைச்சர் சண்முகம் தாம் பேசிய 90 நிமிடங்களில் யுரேசியர்கள் பற்றி அப்படிப்பட்ட கருத்தைத் தாம் தெரிவிக்கவே இல்லை என்றும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை பற்றி கலந்து ஆலோசிக்க அந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முற்றிலும் பொய்யான அந்த குற்றச்சாட்டுடன் கருத்தரங்கில் கூறப்பட்டவை என்று அந்த இனையச் செய்தியில் கூறப்பட்ட கருத்துகளில் பல முற்றிலும் பொய்யானவை அல்லது பாதி பொய்யானவை, திசைதிருப்பக் கூடியவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.