தாதிமை இல்லங்களை ஒரு படுக்கை அல்லது இரண்டு படுக்கைகளைக் கொண்டவையாக மாற்றிவிட்டால் பராமரிப்பு வசதிக்குச் சங்கடம் ஏற்பட்டுவிடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. லியன் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ போ வா, அண்மையில் ஒரு பேட்டி அளித்திருந்தார். முதியோர் பராமரிப்பில் இந்த அறநிறுவனம் போன்ற அமைப்புகள் ஆற்றும் பணி பற்றி அந்தப் பேட்டியில் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சு, தாதிமை இல்லங்களில் ஒரு படுக்கை அல்லது இரண்டு படுக்கை அறைகளை மட்டும் அமைத்தால் கட்டுமானச் செலவு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகிவிடும் என்பது அனுபவ ரீதியாக தெரியவந்ததாகக் குறிப்பிட்டது.
அதோடு மட்டுமின்றி, நடைமுறைச் செலவும் கணிசமாக அதிகரித்துவிடும். கூடுதலாக இத்தகைய இல்லங்களை கட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டுவிடும் என்று அமைச்சு தெரிவித்தது. தாதிமை இல்லங்களில் ஒரு படுக்கை அல்லது இரண்டு படுக்கை அறைகள் மட்டுமே இருந்தால் செலவு அதிகரித்துவிடும். இந்தச் செலவை கடைசியில் நோயாளிகளும் அவர்களின் குடும்பங்களும், வரி செலுத்து வோரும்தான் ஏற்க வேண்டியிருக்கும் என்றது அமைச்சு.