தீமிதித் திருவிழாவில் பங்கேற்று பூக்குழி இறங்குமுன் மரணப் படுக்கையின் விளிம்பில் இருக்கும் ஓர் ஆடவரின் உயிரைக் காக்க உதவுவோம் என்று 58 வயது திரு செல்வகுமார் உத்திராபதி சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. தீமிதி விழாவில் பங்கேற்கும் முன்னர் நேற்று முன்தினம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் இருந்து வடபத்திர காளியம்மன் கோவிலுக்குத் தமது நண்பர் களுடன் சென்றுகொண்டிருந்தார் திரு செல்வகுமார். பிற்பகல் 3.45 மணியளவில் வடபத்திர காளியம்மன் ஆலயத் திற்கு முன்னால் உள்ள 'ஷெல்' பெட்ரோல் நிலையத்தில் கூட்டமாக இருந்ததைக் கண்டு அவர் அங்கே சென்றார்.
அங்கே சீன ஆடவர் ஒருவர் பேச்சு மூச்சின்றி தரையில் கிடந் ததைக் கண்டதும் கடந்த 2009ல் நடந்த அதுபோன்றதொரு சம்பவம் அவரது மனத்திரையில் சில நொடிகள் நிழலாடியது. அப்போது இந்தோனீசியாவின் ஜகார்த்தா அனைத்துலக விமான நிலையத்தில் இதே போன்று ஓர் ஆடவர் பேச்சு மூச்சின்றி இருந்த போது அவருக்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்தும் பலனின்றி அவர் இறந்துவிட்டார். இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு நிலை தன் கண்முன்னே இருந்தாலும் சிறிதும் தயங்காமல் காரியத்தில் இறங்கினார் திரு செல்வகுமார். அந்தச் சீன ஆட வருக்கு நாடித்துடிப்பு இல்லாதது கண்டு உடனே தாம் ராணுவத்தில் கற்ற 'சிபிஆர்' சிகிச்சையைத் தொடங்கினார். தம் நண்பரின் உதவியுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு முதலுதவியாளர்களைத் தொடர்பு கொண்டார். சீன ஆடவரின் சட் டைப்பையில் இருந்த தொலைபேசி மூலம் அவருடைய மனைவிக்கும் தகவல் சொல்லப்பட, அவரும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.
ஆம்புலன்ஸ் வரும் வரை சுமார் 20 நிமிடங்கள் விடாமல் 'சிபிஆர்' சிகிச்சை அளித்தார் திரு செல்வகுமார். அதன்பின் ஆம்புலன்ஸ் அதிகாரிகள் 'ஏஇடி' எனும் மின்னியல் சாதனத்தைப் பயன்படுத்தி சீன ஆடவரை உயிர்ப்பிக்க முயன்றனர். திரு செல்வகுமார் சீன ஆடவருக்கு உதவி புரிந்ததை அருகிலிருந்து பார்த்துக் கொண் டிருந்த மேலும் இரு பக்தர்களான திரு சைமனும் திரு குமாரும் அதைப் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றினர். சீன ஆடவரை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு முன்னால் அவரது மூச்சு திரும்பியதைக் கண்டு அங் கிருந்த பக்தர்கள் அனைவரும் 'ஓம் சக்தி!' என்று கரகோஷம் எழுப்பியதாகவும் 45 வயது திரு குமார் சொன்னார். கூடுதல் செய்தி: தமிழவேல்
சிராங்கூன் ரோட்டில் வடபத்திர காளியம்மன் கோவிலுக்கு முன்னால் இருக்கும் 'ஷெல்' பெட்ரோல் நிலையத்தில் சுயநினைவின்றி கிடந்த சீன ஆடவருக்கு 'சிபிஆர்' சிகிச்சை அளிக்கும் தீமிதி பக்தர்கள். அப்போது மழை தூறியதால் அருகில் இருந்த பக்தர்கள் வேட்டியையே குடையாக உருமாற்றினர். படம்: வி.குமார்