கிழக்கு - மேற்கு எம்ஆர்டி ரயில் பாதையில் நேற்றுக் காலை பூகிஸ் ரயில் தடத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாரத்தில் கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட நான்காவது சேவை தடை இது. மேற்குப் பகுதியில் இருந்து பூகிஸ் நிலையத்தை நோக்கி வரும் ரயில்கள் தாமதமாக வந்தன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட ரயில் பாதையில் ரயில்கள் மெதுவாக சென்றதாக எஸ்எம் ஆர்டி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. காலை உச்சநேரத்திற்குப் பிறகுதான் பொறியாளர்கள் பாதிக்கப்பட்ட தடத்தைப் பார்வையிட முடியும் என்றும் நிறுவனம் சொன்னது. எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பாசிர் ரிஸ் நிலையத்திலிருந்து பூகிஸ் நிலையத்திற்கு பயணம் செய்ய கூடுதலாக 15 நிமிடம் ஆகும் என்று நேற்றுக் காலை 8.43 மணிக்கு தெரிவித்தது.
மீண்டும் சுமார் இருபது நிமிடங்கள் கழித்து பயண நேரம் இருபது நிமிடங்கள் ஆகும் என்று காலை 9.05 மணிக்கு அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. அதன் பின்னர் காலை 11.30 மணிக்கு பயணச்சேவை வழக்க நிலைக்கு திரும்பிவிட்டதாக அது அறிவித்தது. காலை உச்சநேரம் காரணமாக பயணிகள் தங்கள் பயண நேரத்தில் கூடுதல் நேரத்தைச் செலவிட நேரிட்டது. பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர்.