எளிதாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் சுவர்களுக்குச் சாயம் பூச புதிய மனித இயந்திரத்தை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக எந்திரனியல் ஆய்வு மையத்தின் அறிவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'பிக்டோபாட் (PictoBot)' என்ற இந்த எந்திரன், இரு மனிதர்கள் செய்வதைவிட 25% வேகமாக உயரமான சுவர்களுக்கும் சாயம் அடிக்கக்கூடிய திறன் பெற்றது. உதாரணத்துக்கு, வழக்கமாக 90 சதுர மீட்டர் சுவருக்கு இரண்டு பேர் சாயம் அடிக்க ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக ஆகும். ஆனால் 1.5 டன் எடை கொண்ட இந்த எந்திரன், சாயம் நிரப்பப்பட்டு, 12 மின்கலங்களும் பொருத்தப்பட்டிருந்தால் ஒரு மணி நேரத்தில் ஒற்றை ஆளாக அந்தச் சுவருக்கு சாயம் அடித்து முடித்து விடும்.
'ஆப்டிகல் கேமரா', 'லேசர் ஸ்கேனர்' ஆகியவை பொருத்தப்பட்ட இந்த எந்திரன், சுற்றுச்சூழலை ஆராய்வதுடன் 10 மீட்டர் வரை உயரம் கொண்ட சுவர்களுக்கும் சாயம் அடிக்கக்கூடியது. இதற்கு உதவியாக அதற்கென்று ஆறு இயந்திரக் கைகளும் உயரே எழும்பக்கூடிய தானியக்க மேடையும் உள்ளன.