கோலாலம்பூரிலிருந்து ப. பாலசுப்பிரமணியம்
நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்வோர் பாரம்பரிய உடைகள், பூசைப் பொருட்கள் வாங்குவதற்கும் விதவிதமான இந்திய உணவைச் சுவைப்பதற்கும் ஏற்ற இடமாக கோலாலம்பூரில் இருக்கும் லிட்டில் இந்தியா பகுதி விளங்குகிறது. தீபாவளிக்கு முந்தைய சனிக் கிழமையன்று அங்கு சென்றிருந்த போது மாலை வேளையில் கடைகளில் விற்பனை மந்த மாகவே இருந்தது. ஆனால் இரவு நேரம் நெருங்க, நெருங்க கூட்டம் லிட்டில் இந்தியா சாலைகளிலும் அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் தீபா வளிச் சந்தையிலும் நிரம்பி வழியத் தொடங்கியது. சிறப்பு தீபாவளிச் சந்தையில் பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சேலைகள் முதல் பஞ்சாபி ஆடைகள் வரையில் குவிந்திருந்த உடை வகைகள் ஏராளம்.
இதற்கு மேலாக, குத்து விளக்குகள், தெய்வ, அலங்காரச் சிலைகள், ஊஞ்சல்கள், 'பிரீமியர் குக்கர் வகைகள்', தரை விரிப்புகள் போன்ற இதர பொருட்களும் இந்த சந்தையில் இருந்தன. கடந்த 28 ஆண்டுகளாக மலேசியாவின் பினாங்கு, குவாந் தான், பேராக் போன்ற இடங்களில் இருக்கும் விற்பனைச் சந்தைகளில் சேலைகளை விற்று வருகிறார் 43 வயது திரு செல்வம் ராஜு. கடந்த ஆண்டு ஷா அலாம் தீபாவளிச் சந்தையில் கடை வைத்திருந்தபோது மக்களிடம் வரவேற்பு நன்றாக இருந்தது என்று குறிப்பிட்ட திரு செல்வம், இதுவரையில் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. ஆனால் தீபா வளிக்கு ஓரிரு நாட்கள் முன்னர் தான் நிலவரத்தைக் கணிக்க முடியும் என்றார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் பின்னணி
கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸ் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் அதன் வரலாற்றுக்கும் அணுக்க மான தொடர்புகள் உள்ளன. கோலாலம்பூர் முழுவதும் செங்கல் விநியோகம் செய்யும் செங்கல் தயாரிப்பு நிலையமாக 1880களில் பிரிக்ஃபீல்ட்ஸ் இடம் இருந்தது. வெள்ளீயத் தொழில் துறைக்கு ஆதரவாக அங்கு ஒரு ரயில் மையம் உருவாக்கப்பட்டதை அடுத்து 1900களின் தொடக்கத்தில் செங்கல் தயாரிக்கும் தொழில் அங்கு மெதுவாக மறைந்தது.
கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் விளையாட்டு அரங்கிற்கு வெளியே அமைந்திருந்த மற்றொரு தீபாவளிச் சந்தையில் மக்கள் திரளாக வந்து தங்கள் பண்டிகைக் காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர். படம்: அஜெண்டா சூரியா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்
படம்: திமத்தி டேவிட்