சிங்கப்பூரில் எல்லாருக்கும் கட்டாயமான 'மெடிஷீல்டு ஃலைப்' என்ற காப்புறுதித் திட்டம் அமலாகி ஓராண்டு ஆகிறது. அந்தத் திட்டத்தின் மூலம் அதிகமான மக்களுக்கு மருத்துவக் கட்டண உதவி கிடைக்கிறது. அந்தத் திட்டத்தில் கொடுக்கப்படும் மருத்துவ உதவித் தொகை அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 400,000 கோரிக்கைகள் வந்தன. $600 மில்லியனுக்கும் அதிகத் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொகையில் $102.5 மில்லியன் ஏற்கெனவே காப்புறுதி பெறாத மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. பழைய மெடிஷீல்டு திட்டத்தின் கீழ், முந்தைய ஆண்டில் இதே காலத்தில் விடுக்கப்பட்ட 291,500 கோரிக்கைகளின் பேரில் $307.5 மில்லியன் தொகை கொடுக்கப்பட்டது. இந்த விவரங்களைச் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.